Skip to main content

புளியமரம்

கரையோர புளியமரம்

எங்க ஊரு ஆண்டேரிக் கரையோரம் 
எங்களுக்கோ ! 
 இரண்டு வீட்டுக்கும் பொதுவான ஒரு புளியமரம்.

முப்பாட்டன் வச்ச மரம் 
மூன்றுத் தலைமுறையின் 
காலடித்தடம் பட்ட இடம்
குளிக்க வரும்  சிறுசுகளால் 
புளிப்பான பழத்துக்காய் 
கல்லடி பட்ட மரம். 

தாடிவீட்டுப் படித்துறை கரையோரம் 
செழிப்போடு வளர்ந்த மரம்
இடுப்பழகி நடிகை போல
கொஞ்சம் 
கிழக்கு நோக்கி அது  சாஞ்சிருக்கும் .

பொன்னிறமாய் பூ பூக்கும் 
பார்ப்போர் ரெண்டு கண்ணும் அந்த அழகில் 
சொக்கி நிற்கும் 
பூவோடு சேர்ந்த இளம்பிஞ்ச
கடைவாயில் கடிச்சாக்க
நாவரும்பு புளிப்பாலே வெட்கப்படும் 

பூ கொஞ்சம்,பிஞ்சாகி , வந்த பிஞ்சு கொஞ்சம் காயாகி ,
காயில் கொஞ்சம் பழமாகி ,
அறுவடைக்கு காத்து நிற்கும்
அந்த அறுவடை திருநாளுக்காய் 
பொடுசுக நாங்க காத்திருப்போம் .

சின்ன அப்பாயி தலைமையில 
சொந்தகார குட்டாறு பெரியப்பா
புளியம்பழம் உலுக்கையில 
ரெண்டு சணல் கோணி கொண்டு போவோம்
விழும் பழம் பொறுக்கிப்போட நாலு சின்னக்கூடையும் கொண்டு போவோம் .

உலுக்கிய பழம் சேகரித்து 
முட்டாக கொட்டி வைப்போம் 
சின்ன அப்பாயி குட்டாறுக்கும் ,
பொறுக்கிய பொடிசுகளுக்கும் ,
கூலி போக 
இருக்கும் பழத்தை 
சரிசமமாய் 
ரெண்டாக பிரிப்பாங்க ,
உலுக்கும் போது 
கீழ்விழுந்த காய்ந்த குச்சிகளையும்  ரெண்டாகவே பிரிப்பாங்க ,
தலையில சுமந்து வந்து 
வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம். 

அவ்வாறு காய்ச்ச மரம் 
ஒருநாளு இடியாலே பட்டுப்போச்சு ,
பள்ளியில படிச்சப்போ
கடைசியா உலுக்கியதா நினைவிருக்கு 
காய்ச்ச மரம் இருந்த இடம்
இப்போது வெறுமனாய் காத்திருக்கு. 

......சுரேஷ் மணியன் M,A.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...