Skip to main content

புளியமரம்

கரையோர புளியமரம்

எங்க ஊரு ஆண்டேரிக் கரையோரம் 
எங்களுக்கோ ! 
 இரண்டு வீட்டுக்கும் பொதுவான ஒரு புளியமரம்.

முப்பாட்டன் வச்ச மரம் 
மூன்றுத் தலைமுறையின் 
காலடித்தடம் பட்ட இடம்
குளிக்க வரும்  சிறுசுகளால் 
புளிப்பான பழத்துக்காய் 
கல்லடி பட்ட மரம். 

தாடிவீட்டுப் படித்துறை கரையோரம் 
செழிப்போடு வளர்ந்த மரம்
இடுப்பழகி நடிகை போல
கொஞ்சம் 
கிழக்கு நோக்கி அது  சாஞ்சிருக்கும் .

பொன்னிறமாய் பூ பூக்கும் 
பார்ப்போர் ரெண்டு கண்ணும் அந்த அழகில் 
சொக்கி நிற்கும் 
பூவோடு சேர்ந்த இளம்பிஞ்ச
கடைவாயில் கடிச்சாக்க
நாவரும்பு புளிப்பாலே வெட்கப்படும் 

பூ கொஞ்சம்,பிஞ்சாகி , வந்த பிஞ்சு கொஞ்சம் காயாகி ,
காயில் கொஞ்சம் பழமாகி ,
அறுவடைக்கு காத்து நிற்கும்
அந்த அறுவடை திருநாளுக்காய் 
பொடுசுக நாங்க காத்திருப்போம் .

சின்ன அப்பாயி தலைமையில 
சொந்தகார குட்டாறு பெரியப்பா
புளியம்பழம் உலுக்கையில 
ரெண்டு சணல் கோணி கொண்டு போவோம்
விழும் பழம் பொறுக்கிப்போட நாலு சின்னக்கூடையும் கொண்டு போவோம் .

உலுக்கிய பழம் சேகரித்து 
முட்டாக கொட்டி வைப்போம் 
சின்ன அப்பாயி குட்டாறுக்கும் ,
பொறுக்கிய பொடிசுகளுக்கும் ,
கூலி போக 
இருக்கும் பழத்தை 
சரிசமமாய் 
ரெண்டாக பிரிப்பாங்க ,
உலுக்கும் போது 
கீழ்விழுந்த காய்ந்த குச்சிகளையும்  ரெண்டாகவே பிரிப்பாங்க ,
தலையில சுமந்து வந்து 
வீட்டுக்கு கொண்டு சேர்ப்போம். 

அவ்வாறு காய்ச்ச மரம் 
ஒருநாளு இடியாலே பட்டுப்போச்சு ,
பள்ளியில படிச்சப்போ
கடைசியா உலுக்கியதா நினைவிருக்கு 
காய்ச்ச மரம் இருந்த இடம்
இப்போது வெறுமனாய் காத்திருக்கு. 

......சுரேஷ் மணியன் M,A.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட...