நான் ஏன் தமிழ் படித்தேன் ?
எதனால் தமிழ் பாடத்தை தேர்வு செய்தேன் ?
இது போன்ற இன்ன பிற கேள்விகளும் தூக்கமில்லா இரவுகளில் எனக்குள் நானே எழுப்பி கொள்வதுமுண்டு.
அப்போ நான் பத்தாவது படிக்கறச்சே, கேபிள் கனெக்ஷன் கிராமத்தை எட்டிப் பார்க்காத அந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி சேனல் மட்டுமே வாய்த்தது.
ஞாயிறு மாலை மட்டுமே திரைப்படம் போடும் முன்னதாக, வசந்த் &கோ நிறுவனம் வழங்கும் " சாப்பிடலாம் வாங்க " என்கிற சமையல் நிகழ்ச்சியின் முடிவில் சமைத்த பதார்த்தங்களை உண்டு ருசி பார்த்து பரிசு தர வருவார் அமரர் வசந்தகுமார் அவர்கள். அப்போது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் வசந்தகுமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார் .
நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகாவிட்டால், வேறு என்னவாக ஆகியிருக்க ஆசைப்பட்டிருப்பீர்கள் ? என்று,
வசந்தகுமார் கூறினார் " நான் தமிழ் படித்து ஒரு தமிழ் பேராசிரியராக ஆகியிருப்பேன், எனக்கு கம்பனின் ராமகாதை மிகவும் பிடிக்கும் ராமன் நாடு துறந்து காடேகும் நிகழ்வை கம்பர் பாடுவார்
சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
இந்த கம்பனின் ராமகாதையை கவிஞர் வாலி அவர்கள் அவதாரப்புருஷன் என்கிற தலைப்பில் வசன கவிதை நடையில் எழுதியுள்ளார் .மேற்கண்ட பாடலை கவிதை வடிவில் எழுதுகிறார்
கங்கைக் கரையில்
காலைக் கருக்கலில்
கொழுநன் முன்செல
கொழுந்தன் பின்வர
இருவர்க்கும் இடையில்
ஒரு கொழுந்து வெற்றிலை எழுந்து நடந்தாற் போல்
நடந்தால்
மரவுரி இடையில் ஏந்திய ஏந்திழை சீதை. "
என்று பதில் கூறினார்.
ஆக இதுபோன்ற உளிகள்தான் பாராங்கல்லாய் இருப்பவனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியது,கம்பனை நோக்கி வழிகாட்டியது, எனலாம் .
சுரேஷ் மணியன் M, A.
Comments
Post a Comment