இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும். ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய இரண்டு ஸ்வீட் கடைக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் நமக்குதான் மகிழ்ச்சி வரும்.
ஏனெனில் ஒருவன் மைசூர்பாக் மிட்டாயை எடுத்து வீசி அடுத்த கடைக்காரனை அடிப்பான், அவனோ ஜிலேபியை எடுத்து இவனை நோக்கி வீசுவான் இப்படியாக சண்டை நடந்தால் நமக்குத்தான் லாபம் மற்றும் மகிழ்ச்சிதானே ! .
மேலே சொன்ன நிகழ்வைப் போல இரு புலவர்கள் கவிதைச் சண்டை போடுகிறார்கள்
ஒருவர் ஒட்டக்கூத்தர் மற்றொருவர் புகழேந்திப் புலவர். இது கண்ணால் பார்த்ததல்ல, கல்லூரியில் படிக்கிற காலத்தில் தத்தனூர் கிளை நூலகத்தில் பழைய நூல்களை எடைப்போட்டு வாங்கிய போது கிடைத்த தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் படித்தது என்றுணர்கிறேன்.
சோழன் அவைக்களத்திலே தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் முன்னிலையில் நளவெண்பா எனும் நூல் அரங்கேற்றம்.
அரங்கேற்றுபவன் வெண்பாப் புகழ் புகழேந்திப் புலவன் ஆவான்
அரங்கேற்றும் நேரம் அந்திப்பொழுதாக இருந்ததால் புகழேந்திப் புலவனும் அந்த அந்திப் பொழுதைச் சிறப்பித்து ஓர் வெண்பா பாடுகிறான்.
அந்த அந்திப்பொழுதை ஓர் மன்னனின் ஊர்வலம் என்று உவமிக்கும் வகையில் பாடுகிறான் .
அந்த அந்திப் பொழுது எப்படி நடந்து வந்தது என்றால்
மல்லிகைப் பூவினையே வெண்சங்காக எண்ணிக்கொண்ட வண்டினங்கள் ஊதிஊதி முழங்க ,
சிறந்த கரும்பாலாகிய வில்லினை உடைய மன்மதன் காம உணர்வைத்தூண்டும் தன் மலர்க்கணைகளைக் கையிலேந்தித் தாக்கிக் காளையர்களுக்கும் மகளிருக்கும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்த,
அந்த வேளையில் முல்லை மலர்களால் ஆன மாலை தன் தோளில் அசைந்தாட ஓர் இராஜ ஊர்வலம் போல் அந்த அந்திபோழுது மெல்லமெல்ல நடந்து செல்கிறதாம்.
பாடலையும் பாடலுக்கானப் பொருளையும் அவைமுன் வழங்கிவிட்டு அனைவருடைய விமர்சனத்திற்கு காத்திருக்கிறான் புகழேந்திப் புலவன்.
அவைத் தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் கடுங்கோபத்துடன் நிறுத்தய்யா உம் கவியை! இப்படியா சொற்குற்றம் பொருட்குற்றம் விளங்கப் பாடுவது என்றான்.
புகழேந்தி சற்றே நடுக்கத்துடன் என்ன குற்றம் கண்டீர் என்றான் .
ஒட்டக்கூத்தரோ “மல்லிகைப் பூவினையே சங்காக எண்ணிக்கொண்டு வண்டினங்கள் அவற்றை ஊதுவதாகப் பாடினாய் அல்லவா? அதில்தான் குற்றம் கண்டேன் என்றான்.
மலரின் மேற்புறத்தில் அமர்ந்துதானே வண்டுகள் தேனை குடிக்கும் . அப்படி அமர்ந்துத் தேனை குடிக்கும் காட்சியை தாங்கள் வண்டு சங்கைப் பிடித்து ஊதுவதாக உவமிக்கின்றாய் ?
மலரின் முன்புறத்தில் அமர்ந்துகொண்டுத் தேனுண்ணும் வண்டின் காட்சியை சங்கின் பின்புறத்தை வாயில் வைத்து ஊதும் காட்சியோடு எப்படி உம்மால் உவமிக்கமுடிந்தது. இது காட்சிப் பிழையல்லவா? காட்சிப் பிழையோடு கூடிய உன் கவியை இந்த அவையில் அரங்கேற்ற இடம்கிடையாது. தாங்கள் வெளியேறலாம்” என்று ஒட்டக்கூத்தன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.
அவையெங்கும் ஒரே நிசப்தம், தொண்டையைக் கனைத்துக்கொண்டு புகழேந்தி பின்வருமாறு கூறுகிறார்,
அய்யா! கள் அருந்தியவனின் நிலையென்ன?
கள் மயக்கத்தில் தான் என்னசெய்கிறோம் என்னபேசுகிறோம் என்பதுதான் அவனுக்குத்தெரியுமா?
இரண்டு கால்கள் இருந்த போதும் அவனால் நிற்கக்கூட முடிவதில்லையே!
அதுபோல்தான் அதிகமாய் மலர்த்தேனை குடித்த மயக்கத்தில் தான் மலர்என்ற வெண்சங்கின் முன்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா பின்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா என்கின்ற சுயநினைவின்றி வண்டு ஊதிக்கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? என்றார் புகழேந்தி.
இப்பொழுது அவையில் இருந்த மற்ற பெரும் புலவர்கள் எல்லாம் புகழேந்தியைப் பாராட்டத்துவங்கிவிட்டார்கள்.
சட்டென்றுத் தாவியெழுந்தான் ஒட்டக்கூத்தன், ஓடிவந்து புகழேந்தியை ஆரத்தழுவிக் கொண்டு,
இப்பொழுது புரிகிறதா புகழேந்தி நான் ஏன் உன்கவியில் குற்றம் கூறினேன் என்று?
நான் குற்றம் கூறாது விட்டிருந்தால் இப்படியும் ஓர் பொருள் இருப்பது உலகிற்குத் தெரியாமலே போய்விடுமே! ஆதலால்தான் இப்படியோர் நாடகத்தை ஆடினேன் என்றுகூறி மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டான்.
இத்தனைக் கலவரத்தை ஏற்படுத்திய அப்பாடலைப் பாருங்கள்
மல்லிகையே வெண்சங்கா வண்டூத
வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப
முல்லையெனும்
மென்மாலை தோளசைய
மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது!
மீண்டும் ஒரு கவியோடு சந்திப்போம் நன்றி.
அன்போடும் கவியோடும் ; சுரேஷ்மணியன். மு.க.த. (MA)
Comments
Post a Comment