Skip to main content

பார " தீ "

மற்றைய பாடவேளை வகுப்புகளை விட தமிழ் வகுப்பு என்பது மாணவர்களுக்கு சற்று சுதந்திரமானதும், இனிமையான வகுப்பும் கூட ( இலக்கணம் நடத்தாத வரை,  கேள்விகள் கேட்காத வரை மட்டுமே )  . என்னுடைய பள்ளி நாட்களில் எங்கள் ஊரான  சுத்தமல்லி உயர்நிலை பள்ளியில் திருபுரந்தானில் இருந்து ராமச்சந்திரன் என்ற தமிழ் ஐயா எங்களுக்கு தமிழாசிரியர்,
மதிய உணவுக்கு பின் முதல் பாடவேளை தமிழ்,  உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதை போல் அரை தூக்கத்தில் கிரங்கிப்போயிருக்கும்  வேளையில் வகுப்பினுள் அவர்  நுழைவார்,  பாடம் நடத்தி முடித்து அவர் கிளம்பும் நேரத்தில் எல்லோரும் திடீரென அரை தூக்கத்தை விட்டு எழுந்து " நன்றி அய்யா " என்போம்,
அதில் என்னை போன்ற பாதி பேர் " பன்றி அய்யா " என்று கூட்டத்தோடு கோரசாக சொல்வோம்,
பக்கத்தில் உள்ளவன்லாம் நம்மளத்தான் பார்ப்பான்.
இப்படியே தா.பழூர் மேல்நிலைப்பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பில்  ஒரு நாள் பாரதியாரின் மனைவி பெயர் என்ன?  என்று பக்கத்து பெஞ்ச் நண்பனை கேட்டார் எங்கள் தமிழ் அய்யா.
 அவனோ பாரதியாரின் மனைவி பெயர் தேவயானி என்றான்.  வகுப்பறையோ கொள்ளென்று சிரித்தது, ஏனெனில் அப்போதுதான் பாரதியாரின் வாழ்வை விளக்கும் பாராதி எனும் திரைப்படம் வந்திருந்தது .
உடனே அவர் கோபத்துடனும் சிரிப்புடனும் அப்போ பெரியார் மனைவி யார்னு கேட்டா?  குஷ்புன்னுதான் சொல்லுவியா ராஸ்கல் என்றார்.
சரி விடயத்திற்கு வருவோம்.

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள், ஒவ்வோர் ஆண்டும் என் பிறந்த நாள் வந்து போன சில நாட்களுக்கு பிறகுதான் " ஓ, நம் பிறந்த நாள் வந்து போய்விட்டதோ " என்று இது நாள் வரை கழித்துக்கொண்டிருக்கின்றேன், இந்த ஆண்டும் அப்படியே ஆயிற்று .

அதே போல தமிழறிஞர்களின் நூலை படிக்கும் போதோ, அவர்கள் பற்றிய நினைவு மேலிடும்போதோ " இந்த ஆண்டேனும் இவரின் பிறந்த நாளை கொண்டாடியோ அல்லது மறைந்த தினத்தை அணுசரித்தே ஆக வேண்டும் என்று உள்ளூர நினைத்துக்கொள்வேன்,
ஆனால் அதையும் கடைபிடித்ததில்லை என் பிறந்த நாளை எவ்வாறு மறந்து கழித்தேனோ அதே போல் அவர்களுக்கும் அதே கதிதான்.
ஆனால் இன்று விதி விலக்காக என்ன நினைத்தேனோ தெரியவில்லை கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்டு வீட்டின் முகப்பு சுவற்றில் பதினெட்டு பருவ வயது பெண்ணை போல  ஒய்யாரமாய் நெளிந்து கொண்டிருக்கும் நாட்காட்டியின் நேற்றைய தேதியை கிழிக்கலானேன் .
 என்று தேதியும் கிழமையும் காட்டும்  கைக்கடிகாரமும், அலைபேசியும் வந்ததோ அன்றிலிருந்து நம்மில் பலருக்கு நாட்காட்டி கிழிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது எனலாம்,
அதற்கு நானும் விலக்கன்று. ஆனால் இன்று எதேச்சையாய் நாட்காட்டியை கிழிக்கும் போது  ( நாம் என்ன  படிச்சி  கிழித்தோம், பேப்பரையாவது கிழிப்போமோ என்று நினைத்தவாறே நினைத்தவாறு )  
பாரதியாரின் பிறந்த நாளை அறிந்தேன்.
 இருபதாம் நூற்றாண்டில் வால்ட்விட்மனின் " புல்லின் இதழ்கள் " எனும் புதுக்கவிதையின் மீது கவரப்பட்டு, யாப்பு, தளை, அசை, எனும் பழ இலக்கண வரம்புகளை பரணில் தூக்கியெறிந்து பாமரனும் கவிதையை அறிய வேண்டும் எனும் நோக்கில் இந்தியத்தையும், விடுதலையையும்,  ஒற்றுமையையும்,
அன்பையும்,
இயற்கையையும் மட்டுமே தனது கவிதையின் உள்ளீட்டு கருப்பொருளாக கொண்டு கவிதை மூலம் வெள்ளையனுக்கு திகிலை ஏற்படுத்தியவர்தான் இந்த பாரதியார்.
எண்பதுகளின் மத்தியில் பள்ளி பாடத்தில் " ஓடி விளையாடு பாப்பா " எனும் பாடல் கட்டாயம் இருந்தது.  ஆனால் தற்காலத்தில் பள்ளியின் பாடத்திட்ட நிலையோ வேறு.

    ஔவையின் ஆத்திச்சூடிக்கும்
பாரதியின் புதிய ஆத்திச்சூடிக்கும்  நிரம்ப வித்தியாசம் உண்டு.
 அதில் இரு வரிகளை மட்டும் தங்களோடு  பகிர்ந்திட அவாவுறுகிறேன்.
" மீதூண் விரும்பேல்  என்று ஔவை பாட்டி  கூறுவாள்", அதாவது அதிகமான உணவை உண்ணாதே என்பாள்.
ஆனால் பாரதியின் காலமோ சுதந்திரத்திற்காக மக்கள்  போராடிய காலம், போராட உடல் வலிவு மக்களுக்கு முக்கியம் அதனால் பாரதி பாட்டன்  சொல்வார் " ஊண் மிக விரும்பு " நிறைய சாப்பிட்டு உலை வலிமையாக்கு, அப்போதுதான் எதிரியோடு போராடலாம் என்பார்.
     "போர்த் தொழில் புரியேல் "
 சண்டை, சச்சரவுகளிலே காலத்தைக் கழிக்காதே என்பாள் ஔவை பாட்டி.
 ஆனால் பாரதி பாட்டனோ
 " போர்த்தொழில் பழகு " என்பார்.  இவ்வாறாக தான் வாழ்ந்த காலத்திற்கு ஏற்றது போலவும் பிற்கால சந்ததியை நல்வழிப்படுத்தும் கவிதைகளை விட்டுச்சென்றுள்ள பாரதியின் பிறந்த நாளான இன்றேனும் அவரை வணங்குவோம்.

____________   அச்சம் தவிர்.

இப்படிக்கு  : சுரேஷ்மணியன்

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட