எனது நேரடி பார்வையில் படும் விதமாக வைத்துள்ள எனது புத்தக அலமாரியில் நம் மாண்புமிகு அமைச்சர் . S. S. S அண்ணனின் " மக்களோடு நான் " நூல் நடுநாயகமாக வைத்திருப்பேன். மாதம் ஒரு முறையேனும் சில பகிர்வுகளைப் படித்து பல மேன்மக்களின் ஆளுமைப்பண்புகள் குறித்து வியப்பதுண்டு.
ஆலத்தூர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களைப் பற்றி, நம் அண்ணன் மாண்புமிகு. அமைச்சர் அவர்கள்
" மக்களோடு நான் " நூலில் குறிப்பிட்டுள்ள ஹாஸ்யமான பகிர்வும் பதிவும் இதோ
" எங்க அண்ணன் ஒருத்தர் இருக்கார். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. குன்னம் தொகுதியில் உள்ள ஆலத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் . ஏழு முறை ஒன்றியச் செயலாளர் .உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி.மக்களின் அன்பைப் பெற்றவர்.
அவர் எல்லோரையும் அண்ணன்னுதான் கூப்பிடுவார், தன்னை விட வயது குறைந்தவர்களையும். முன்னாள் ( இந்நாள்) அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களின் மச்சினர்.
ஒரு முறை, மீன்வளத் துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி அவர்கள் எங்கள் பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தாரு. அவரை வரவேற்று அண்ணன் கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்தோ ' வாங்க அண்ணே ' அப்படின்னாரு. அவரு நெளிஞ்சுகிட்டே `என்னண்ணே உங்க வயசுக்கு என்னை அண்ணன்னு கூப்புடுறிங்க ' ன்னாரு. `அது பழக்கமாயிடுச்சிண்ணே ' அப்படின்னாரு நம்ம அண்ணன்.
சாமி `என்னை அப்படி கூப்புடாதீங்கண்ணே 'ன்னு சொல்ல, நம்ம அண்ணன் அதுக்கும் 'சரிண்ணே 'ன்னு பதில் சொல்ல, அமைச்சர் சாமியால் சிரிப்பை அடக்க முடியல. அண்ணனும் சிரிச்சிட்டாரு. அப்ப நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பத்தி ஒரு செய்தி எங்க பக்கத்தில உண்டுன்னு சொல்லி 'அதைச் 'சொன்னேன். மந்திரியும் கூட வந்தவங்களும் சிரிச்சி சிரிச்சி ஓய்ஞ்சு போனாங்க.
அப்புறம் திராவிடர் கழகத் தலைவர் சுற்றுப்பயணம் வந்தபோது, ' கிருஷ்ணமூர்த்தி ரொம்ப மரியாதையானவரா இருக்காரே 'ன்னு கேட்க, அய்யாகிட்டயும் `அந்தச் செய்தி' யைச் சொன்னேன் ." இனி கிருஷ்ணமூர்த்தியை மறக்க முடியாதுய்யா " அப்படின்னு அய்யா சொல்லி சிரிச்சாங்க.
பத்து மாதங்களுக்கு முன்பு நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணம் தளபதி அவர்கள் தலைமையில் நடந்தது. வாழ்த்து வழங்கிய எல்லோரும் கிருஷ்ணமூர்த்தி அண்ணனை பெருமையாகச் சொல்லி ` வயதில் குறைந்தவர்களையும் அண்ணன்னு கூப்பிடுவாரு'ன்னு பாராட்டினாங்க.
நான் வாழ்த்தும் போது `அந்த செய்தியைச்' சொல்லி வாழ்த்தினேன் தளபதி அவர்கள் உட்பட அனைவரும் சிரிக்க, நம்ம அண்ணனும் கண்ணுல தண்ணி வர சிரிச்சாரு .
`அண்ணன் கிருஷ்ணமூர்த்தி எல்லோரையும் அண்ணன்னு கூப்பிடுவார் என்பது தெரிந்த விஷயம். அவர் பத்தி எங்க பக்கம் ஒரு செய்தி உண்டு. ஒரு நாள் அண்ணான் காரில் போய்க்கிட்டிருந்தாரு. ஒரு இடத்துல வயல்ல நிறைய பேரு வேலை செஞ்சிக்கிட்டிருந்தாங்க.
வயல் ஓரமா ஒரு தூளி கட்டி ஒரு குழந்தைய படுக்க வச்சிருந்தாங்க. அந்த இடத்த அண்ணன் கார் கிராஸ் பண்றப்ப, அந்தக் குழந்தை அழுதுகிட்டுருந்தது. உடனே அண்ணன் வண்டிய நிறுத்தச் சொல்லி இறங்கினாரு.
வயல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவங்கள பாத்து, `ஏம்மா, அண்ணன் அழுதுகிட்டு இருக்காரு, வந்து தூக்குங்கம்மா ' அப்படின்னு சொல்ல, அந்தக் குழந்த அண்ணனே அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. ' "
எஸ்.எஸ்.சிவசங்கர்
( 16.07.2013 )
Comments
Post a Comment