"" தீர்ப்பு ''
பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு, " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும் ஆண்டேரிக்கரை மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண படையாச்சி.
அந்த ஊரு பிறை நிலா வடிவான தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில் குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது. ஏரிக்கு வடமேற்கே அரசமரம் பக்கத்தில் உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ? அந்த குளியல் துறைக்கு மேற்கு பக்கத்தில் மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இருந்ததால் இடுகுறி பெயராக அனைத்து துறையும் பரிமளித்திருந்தது . அதுக்கு நேர் கிழக்கே உள்ள துறை மாது ஊட்டு துறை, அதுக்கு அடுத்து கொழுந்து ஊட்டு துறை, அடுத்து வில்லு ஊட்டு துறை, அதிலிருந்து கிழக்கே தெற்கு நோக்கியதான கரையில் முதலாவது " தாடி ஊட்டு துறை ' அடுத்து " சீப்பிலி ஊட்டு துறை ' என ஊரார் பெயரிட்டு சொல்லி வந்தனர்.
ஏரியினுள்ளே கட்டியிருந்த வேட்டியோடு ,படர்ந்து கிடக்கும் தாமரை கொடிகளை இரு கைகளாலும் ஒதுக்கியவாறே இடுப்பளவு தண்ணீர் வரை உள்ளே போய் தலையை முங்கி எழுந்து ;கழுத்துப்பட்டை ,முதுகுபக்க அழுக்குகளை விரல்களால் தேய்த்து குளித்து எழுந்து கரையோரம் சுருட்டி வைத்த பச்சைத்துண்டை இடுப்பில் கட்டியவாறு, வேட்டியை அவிழ்த்து நாலு அலசு அலசி முறுக்கிப் பிழிந்து உதறி, முதுகில் போர்த்தி அந்தி வெயிலில் வேட்டியை காயவைத்தவாறே கிழக்கே போகும் ஒற்றைத் தார் ரோட்டில் பொடிநடையாக வீடு வந்து சேர்ந்தார் கிருஷ்ண படையாச்சி .
தொடரும் ........
கரிசல்நாடன் M.A,
Comments
Post a Comment