இன்றைய இலக்கியம் சார்ந்த கிறுக்கலை பார்க்கும் முன், ஒரு சின்ன கலாய்ப்பு.
இன்று நம்மில் , படித்த பல பேர் தமிங்கிலம் தான் பேசுகிறார்கள். சிலர் ஓரளவு தமிழ்நடையை பின்பற்றி பேசுகிறாகள். ஆனாலும் அதிகமான நபர்கள் சில வார்த்தைகளை இம்மியளவேனும் பயன்படுத்துவதில்லை. அந்த வரிசையில் இன்றைய வார்த்தை
"' இராத்திரி ''
தமிங்கிலர்கள் பேசும் முறை
1 .மார்னிங் என்ன சாப்பிட்ட?
2 .லன்ச்சுக்கு என்ன ஐட்டம் எடுத்து வந்துருக்க.?
ஓரளவு தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துவோர் பேசும் முறை
1 .காலையில என்ன சாப்பிட்ட.?
2.மதியம் சாப்பிட என்ன கொண்டு வந்துருக்க. ?
ஆனால் மேற்கண்ட இரு அணியும் சொல்லி வைத்தாற் போலும் பயன்படுத்தும் வார்த்தை
நைட் என்ன டின்னர் & சாப்பாடு ?
இராத்திரி எனும் வார்த்தை அவர்களுக்கு அருவருப்பு போல!
கிராமத்தில் மட்டுமே மேற்கண்ட இராத்திரி எனும் சொல் பல்வேறு முறைகளில் புழக்கத்தில் இருக்கிறது. Ex...
ராத்திரி சரியா தூங்கல ,
ரவிக்கி வா ,
ராவுல என்ன சத்தம்
இப்படியாக இராத்திரி எனும் சொல்லில் இருந்து சமஸ்கிருதத்தில் இரவை குறிக்கும் '"ராத் Raath ''சொல் உருவானது. பிறகு ராத் என்பது ஆங்கிலத்தில் Night ஆனது என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
மாலை பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பிய தலைவர் கலைஞர் அவர்களிடம், அவரது சக நண்பர் "" ராத்திரிக்கு என்ன சாப்பாடு ? ''
என்று கேட்டாராம். உடனே காலைஞர் சொன்னாராம் இராத்திரிக்கு எண்ணெய் சாப்பாடு என்று கூறிவிட்டு போய்விட்டாராம். குழம்பிய நண்பருக்கு பிறகுதான் புரிந்ததாம் கலைஞரின் சிலேடை விளையாட்டு இராத்+திரி +எண்ணெய். !!!!!??????
மேட்டருக்கு வருவோமா ? பொறுக்க!!!
விடயத்திற்கு வருவோமா ?
இப்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத முனைப்பை திருக்குறள் ஆழ்ந்து நோக்குவதில் சிந்தை செல்கிறது. காரணம் என்னவாக இருக்குமென எண்ணிப்பார்த்ததில் நான் திருக்குறள் எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்தும் இடத்தில் இருப்பதாலோ என்ற வினாவும் எழுகிறது.எங்கள் நிறுவனத் தாளாளர் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்கள் சிறிய அளவிலான தவறு செய்தால் நூதன தண்டனையாக 50 குறளை பொருளுடன் ஒப்புவிக்கும்படி சொல்வார்கள். ஒருவேளை அதுவும் கூட என்னில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அடியேன் புதுக்கவிதைக்கான கவிதைக்கரு வேண்டி காமத்துப்பாலில் கவிதை தேடியதெல்லாம் கல்லூரி காலம். ஆனால் இன்று படிக்கும் எந்தவொரு குறளிலும் சிந்தை நங்கூரமிட்டு சில நிமிடங்கள் நகர மறுக்கிறது.
அந்த வகையில் சிந்தை நங்கூரமிட்டு நினைத்த மாத்திரமே சிரித்து மகிழ்ந்த "" அவையறிதல் '' தலைப்பிலான மூன்று குறள்களை பார்ப்போம் சிரிப்போம்.
வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் ""குறள் 714 .
அறிவாளிகள் நிரம்பிய அவையில், மிகுந்த அறிவாளி என மற்றவர் பேசும்படி பேசு. ஆனால் அறிவு குறைந்த கற்காதவரிடம் அவர்களை விட சாதாரண மனிதனாகப் பேசு ''
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
குறள் 719:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
குறள் எண் 720
தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
இந்த மூன்று குறளையும் பொருளையும் அதன் பொருளையும் படித்த பிறகு, சிந்தையில் தோன்றியதோ ஒரு திரைப்படத்தின் சில நிமிடக் காட்சிகளே . வள்ளுவர் கூறிய விடயம் புலனாயிற்று
சிரித்து மகிழ்வோம் வாருங்கள்
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மிக்ஸி காமெடி
பெண் ;மிக்ஸி ரிப்பேர்க்கு குடுத்தேனே சரியாச்சா ? இல்லையா ?
வில்லேஜ் விஞ்ஞானி : ஆக்சுவலா டிஸ்மாண்டல் பண்ணியாச்சு, ஆனா கார்பன் தேஞ்சுட்டதால, ஆரம்பிக்சர்ல Rbm ஸ்பீடு கம்மியாயிடுச்சு, So ventre furewell forcela ஒரு நல்ல வேரியேஷன் ....
பெண் ; யப்பா? அது இப்ப சுத்துமா ? இல்லையா ?
இப்படிதான் அவையறியாது பேசினால் மொக்கையாவீர்.
ஹாஹாஹா
தமிழோடு ; சுரேஷ்மணியன் M A,
திருக்குறள் வாசிப்பு வித்தியாசமான மாற்றத்தைத் தருவதறிந்து மகிழ்ச்சி.
ReplyDelete