பாட்டிலுக்கு பெயர் பெற்ற ஊரை
தன் பாட்டினால் புகழடையச் செய்த
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அழகின் சிரிப்பு நூலில் கிளியின் தன்மை, அழகு,
குணம் பற்றி கூறுமிடத்து, ஒரிடத்தில் கிளியைப்பற்றி பாடுகிறார் .
முடிகிற இடத்திலிருந்து புதிய எண்ணங்களும், ஆற்றொணா வருத்தமும் இக்காலத்திய இளையோர் பற்றி நினைக்கையில் மேலிடுகிறது எனக்கு
"" காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்! ''
கிளியே ! காட்டில் திரிகிறபோது கிரீச் கிரீச்சென்கிறாய்
கூட்டில் இருக்கும் போது எங்களின் குழந்தைகள் மழலைமொழி போல கொஞ்சுகிறாய்
சிலர் வீட்டில் இருக்கும் போது "" தூத்தம் '' ( அக்ரஹார வழக்கு ) என்பார் ,பொதுவெளியில் வந்தால் அதனை தண்ணீர் என்பார்கள். உன்னைப் போல்தான் அவரும் கிளியே வீட்டில் ஒன்று பேசுவார் வெளியில் ஒன்று பேசுவார்.
என்கிறார் பாவேந்தர்.
மேற்கண்ட கிளிக்கு கூறிய ஒப்புமையை, தற்கால நம் தமிழர் பேசும் முறையோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.
வீட்டிலே சோறென்பார் ,எலுமிச்சை சோறென்பார்,தயிரென்பார், கோழிக்குழம்பென்பார், பொறியலென்பார், சட்டையென்பார், முடியென்பார்,மயிறென்பார் ..
இதுபோல் உள்ள தமிழை இல்லத்தில் பேசுவார்,
ஆனால்
பொதுவெளியிலோ நாகரீகம் கருதி தமிழை மறைத்து
ஒய்ட் ரைஸென்பார், லெமன் ரைஸென்பார், Curd rice என்பார், Chiken greavy என்பார், Side dish என்பார், Shirt என்பார், Hair cutting என்கிறார் கிளியே உன்னைப் போலவே இவர்களும் கிளியே ... என்று நினைக்கத் தோன்றுகிறது.
சுரேஷ்மணியன் M A,
Comments
Post a Comment