மக்கள் சோம்போறியானர்களா ?
கார்ப்பரேட்டுகள் மக்களை சோம்பேறியாக்கினார்களா ?
கொரோனா நோய்த்தொற்று வந்த பிறகுதான் கிராமங்களில் வாழுவோரையும் நவீன விளம்பரங்கள் மூலம் , கார்ப்பரேட் வணிகம் எந்தளவுக்கு அவர்களின் பணத்தை அவர்களாகவே விரும்பி பொருட்களை கடைகளில் வாங்க வைத்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. நகரத்தில் இந்த சூழல் இருப்பது சகஜம்தான் என்று நினைத்தாலும்,
கிராமிய சமூக, தற்சார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
ஒருகாலத்தில் 1980 க்கு பிறகு கிராமத்தில் உள்ள கடைகளில் குளியல் சோப் ,துணி சோப் ,ரவா ,மைதா ,பிளேடு ,பேனா ,பென்சில் ஆடைகள் இது போன்று வீட்டில் தயாரிக்க,( அ) உற்பத்தி செய்ய முடியாத பொருளை மட்டுமே வாங்குவார்கள்.
கடைக்கு துணிப்பை எடுத்துச் சென்று அரிசி வாங்குவதை அவமானமாக நினைத்த கிராமிய வாசியினரோ இன்று பை அரிசி வாங்கி இடத் தோள்பட்டையில் தூக்கி செல்வதை பெருமையாக நினைக்கிறான்.
புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி பரம்பறைகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் பாக்கெட்டுக்களை கடைகளில் இறுமாப்போடு குரல் உயர்த்தி கேட்கிறார்கள்.
ஒருகாலத்தில் எந்த பருவத்தில் எவ்வகை தானியம் கிடைக்கிறதோ அதை ஆறு மாத காலத்திற்கு உணவுக்குத் தேவையானதை சேமித்து வைத்தார்கள்.
உதாரணம் ;
நெல், மிளகாய்,உளுந்து ,துவரை கொத்தமல்லி,பயறு வகைகள் காய் வகைகளில் வற்றல் தயாரித்தல், எண்ணெய் வித்துக்கள், சிறுதானிய விதைகள் சமையலுக்கு தேவையான கடுகு தாளிக்க வெங்காய சீசனில் ( கருவடம்) கடுகு வடகம், அப்பளத்திற்கு மாற்றாக அரிசி வடகம்,
வீட்டோரத்தில் எலுமிச்சை, கரிவேப்பிலை, வாழை. தோட்டத்தில் மா, முருங்கை, இவ்வாறு பயன்படுத்தி மற்றவரிடம் காசு கொடுத்து உணவுக்காக. எதையும் வாங்காத இந்த சமூகம் இன்று மாட்டுச் சாணத்தை தவிர அனைத்தையும் காற்றால் நிரப்பப்பட்ட காகிதப் பைகளில் வாங்குவதை பெருமையாக நினைக்கிறது.
உலக வரலாற்றில் நூடுல்ஸ் கண்டுபிடித்தது நாம். அனால் அத்தகைய இடியாப்பம் செய்வதை மறந்து, மலைத்து Yippe, maggi யையும் வாங்கி சமைப்பதை பெருமையாக நினைக்க வைத்த பெருமை ஊடக விளம்பரம் + கார்ப்பரேட் கம்பெனிகளையே சாரும்.
நெல் அறுவடைக்குப் பிறகு நெல்லை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் விடியலில், கருத்த பெரிய கொப்பரையில் காய்ந்த எள்ளு செடிகளை போட்டு அவிக்கும்போது மார்கழி தை மாதமாக இருந்தால் பக்கத்து வீட்டு நண்டு சிண்டு பொடிபயலுகளோட சேர்ந்து குளிர் காய்ந்ததை மறக்க முடியுமா ? கிடைத்த அரிசியில் புது சோறு சமைத்துப் போட்ட கிராமங்கள் இன்று எங்கே போனது.
வாரத்துக்கு இரண்டு ரூபாயில் ஒரு கோபால் பற்பொடு பாக்கெட்
வாங்கி பல்துலக்கியவன், இன்றோ பிரஷ் பேஸ்ட்டுக்கு 250 ரூபாயாவது செலவு செய்தவன் பின்னனி என்ன.? கோபால் பல்பொடி போட்டு துலக்கியவன் எல்லாம் பல் உடைந்து பொக்கை வாயுடனா இருந்தான்.
மூன்று மாதத்திற்கு தேவையான இட்லி பொடி அரைத்து, இடித்து பயன்படுத்திய நம்மவர்கள், இன்றோ தோசைக் கல் அடுப்புக்கு விஜயம் போனபின் இட்லி பொடி வாங்க கடைக்கு ஓடுகிறான்.
பழைய சோறுக்கோ இன்ன பிறவற்றிற்கோ மாங்காய், எலுமிச்சை, நாரத்தை, பூண்டு, இஞ்சி, கொத்துமல்லி, புளி மாங்காய் ,வடுமாங்கா புளிமிளகா, மோர்மிளகா, என பல்வேறு தொடுகறி ஊறுகாய்களை ஒரு ஆண்டுவரை பயன்படுத்துமளவு தயார் செய்த நம்மவரின் உணவு வகைகள் என்ன ஆச்சு ,இன்று தொட்ட தொண்ணூறுக்கும் "ஆச்சி " என ஆயாச்சி . மிளகு ,சீரகம் ,பூண்டு, போட்டு தட்டி புளிகரைத்து ஊற்றினால் உருவாகும் ரசத்திற்கே ரசப்பொடி வாங்குறான் நம்மாளு.
பலபேர் கடையில மிளகாய் ,சாம்பார் ,மசாலா பொடிகள் வாங்கி சமைப்பதால் தன்னை நாகரீகமானவன்,உயர்ந்தவனாக காட்டிக் கொள்ள நினைக்கிறானே ! அது ஏன் ?
அப்போதெல்லாம் வீட்டிற்கு ஒரு பால்மாடு, சில ஆடுகள், கோழிகள் ஆகியனவை வளர்க்கப்பட்டதால் சுய தேவை ( உணவு ) பூர்த்தி போக எஞ்சியதை வியாபாரம் செய்தனர். கொரோனா வந்த பிறகுதான் தெரிகிறது என் ஊர் சுத்தமல்லியில் 1 லிட்டர் 65 ரூபாய் என பல நூறு பால் பாக்கெட்டுகள் ( தயிர் உள்ளிட்ட ) தினசரி, பல மாதங்களாக
விற்பனையாவதை.
தினசரி காலையில் நீராகாரம், பால் ,மோர், இளநீர், குடிப்பது மாறிப் போய் காபியும் டீயும் குடிக்கும் பழக்கம் நம்மை தொற்றிக் கொண்டனவே ! இது எவ்வாறு ?
பருவ காலங்களில் விளையும்
நாவல்பழம்
விளாம் பழம்
பனம்பழம்
புளங்காய்
இலந்தைப்பழம்
நெல்லிக்காய்
கொய்யாப்பழம்
கொடுக்காப்புளி
வெள்ளரிப்பழம்
கோவைப்பழம்
மாம்பழம்
பப்பாளிப்பழம்
மற்றும் பல பழவகைகள் உண்டு வந்த மக்கள் தற்போது பலவகையான மரபனு மாற்றம் செய்யப்பட்ட பழவகைகளை உண்டு வருகின்றனரே அது ஏன்? எப்படி ? .
இவை அத்தனைக்குப் பின்னால் இருந்து நம்மை மாற்றியப் பெருமை கார்ப்பரேட்கள் + மீடியா விளம்பரம் + நம் முட்டாள்தனத்தையே சாரும்.
திருந்துவோம் திருத்துவோம்.
சுரேஷ்மணியன்
Comments
Post a Comment