Skip to main content

நிலன் நோக்கும் பூக்கள்

 அணைவருக்கும் வணக்கம்.

 ஊரடங்கில் உடல் அடங்கிக் கிடந்தாலும், உள்ளம் அடங்கிடுமா ?
 அல்லது
தமிழ் இலக்கிய  எண்ணம்தான் மனதில், சிந்தையில்  ஒடுங்கிடுமா ?

நான் புது வித கோணத்தில் ( நூலாசிரியன் கருத்து அல்ல)  அணுகிய சில இலக்கியக் வரிகளின் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கமாகும்.


இலக்கியம் என்றாலே, எலக்கியம் கிலோ என்ன விலை?  என்று கேட்கிற புது தலைமுறை வந்துக்கொண்டிருக்கும்  காலக்கட்டத்தில், இலக்கியம் பேசுபவனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமும் வருகின்ற காலமிது.  ஆனாலும் இலக்கியத் இன்பத்திற்கு நிகர இறைவன் இதுவரை எதனையும் படைத்தளிக்கவில்லை என்றே அறிஞர் உணர்வர்.

இலக்கியங்கள் படிப்பவனின் காலச்சூழல், மனச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப தனது கருத்தையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் ஆற்றல் வாய்ந்தது. நூலாசான் கூற வந்த கருத்து உணர்ச்சி  படிப்பவனுக்கும் ஏற்பட வேண்டும்.

ஆனாலும் படிப்பவன் தன் சமகால சூழலுக்கு ஏற்ப நூலாசானுக்கு சிறுமை ஏற்படாதவாறு, வேறு விதமான பொருளை கூறுதலும் உண்டு. இது தவறல்ல.

உதாரணத்திற்கு ஒரு திருக்குறளை பார்ப்போம்.
அறத்துப்பால்  ,பொருட்பால் , அறிந்த அளவு நாம் இன்பத்துப்பாலை அறிந்திட முயலவில்லை.  இன்பத்துப்பால் ஒன்றும் 18+ அல்ல.

அங்கேயும் அரிய ,அழகிய  கற்பனைக்காட்சிகள் இலக்கிய இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  அதை பிறகு பார்ப்போம்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1094)

இதன் பொருள் யாதெனில் ஒரு தலைவன் ( Hero ) தன்னுடைய தலைவியை ( Heroien ) பற்றி கூறுகிறான். யான் அவளை  நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்( வெட்கத்தால்) ; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

இது வள்ளுவர் கூறும் குறள் கருத்து.  ஆனால் இதே குறளுக்கு,
 ஈழத்தில் போர் நடக்கும் காலகட்டத்தில்   ஒரு ஈழத் தமிழ் போராளி கூறும் விளக்கம் வேறானது, அதே சமயம் வியப்பானதும் கூட.

நான் என்னுடைய தலைவியை காணச் சென்றேன்.  அப்போது அவள் என்னைப் பார்க்கவில்லை. தலை குனிந்து மண்ணைப் பார்த்தாள். நான் நோக்காத போது  என்னைப் பார்த்து மெல்ல சிரித்தாள்  .ஏன் தெரியுமா ? என்னைக் காதலிக்கிறேன் என்று காணவந்துவிட்டாயே ,இந்த மண்ணின் விடுதலைக்கு நீ என்ன செய்தாய் ?  என்று .
நான் அதற்கு நாணி அவளை காணாத போது என்னைப் பார்த்து லேசாக சிரித்தாள்  என்று அவன் குறளுக்கு பொருள் கொள்கிறான்.

மேற்கண்ட குறளை அப்படியே மாற்றி கண்ணதாசன் அவர்கள்  வாழ்க்கைப்படகு படத்தில்
 MSV யின் இசையில் சஞ்சரிக்க வைத்துள்ளார்



நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே


உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே.

நான் அணுகிய குறளைப் பார்ப்போம்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

(அதிகாரம்: நலம்புனைந்துரைத்தல் . குறள் எண்:1114)

குறளின்  பொருள் ;
        குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், "இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே" என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

என்று தலைவன் தன் தலைவியின் அவயவங்களை வியந்து கூறுகிறான்.

குவளை மலர் என்பது இலக்கியத்தில் பெண்களின் கண்ணுக்கு உவமையாக கூறப்படும் மலர்.

குவளை மலர் ஆம்பலைப் போன்ற நீர்த்தாவரம்ஆகும் , பார்க்கும்போது குவளையும், ஆம்பலும் ஒரே மலர் போன்று தோன்றினாலும் இரு மலர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியமும் கூட.
ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது. இது மலைப்பக்கச் சுனைகளில் மிகுதியாகப் பூத்திருக்கும். சில இடங்களில் கழி, பொய்கை போன்றவற்றிலும் வளர்ந்திருக்கக் காணலாம்.
               சான்றுக்கு சில இலக்கிய வரிகள்.;

 “பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை”என்றும், “கயத்துவளர் குவளை”என்றும் ஐங்குறுநூறு (225,  277 ) வரிகள் கூறும்.

 மேலும்,
  ‘அரக்கு இதழ்க் குவளை’ (பெரும்பாணாற்றுப்படை, வரி 293),


 ‘மா இதழ்க் குவளை’ (பட்டினப்பாலை, வரி 241)

என்ற இலக்கியப் பகுதிகளால் குவளையில் செங்குவளை, நீலக் குவளை ஆகிய இரு இனங்கள் உள்ளதை அறிகிறோம். சங்கப் பாடல்களில் உவமையாக இம்மலர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேவாரம்,திருப்புகழ், திருமந்திரம் என அனைத்திலும் பாடப்பட்ட மலர் இது. மலர்ந்தவுடன் குவளை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆகவேதான் பெண்ணின் அழகு பெற்ற மையுண்ட விழிகளுக்கு ஒப்பிடப்படுகின்றது. இலக்கியங்களில் குவளை மலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படுவதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
                                                       “குவளை உண்கண்”  ___ குறுந்தொகை, 167                                                                           
மேலும், பெண்களின் கூந்தல் குவளை மலரின் மணம் வீசுவதை, “குவளை நாறும் குவைஇருங் கூந்தல்” என்று குறுந்தொகை (பாடல் 300 ) சுட்டுகிறது.
குவளை காலையில் மலர்ந்திருக்கும்; மாலையில் கூம்பும் தன்மையுடையது ஆகும்.

ஆக குவளை மலர் நீர் வாழ் தாவரம் என்றே அறுதியிட முடிகிறது.

மேற்கண்ட  குறளின் காட்சியையும் பின்புலத்தையும் பார்ப்போம்.


தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் இருந்து மெய்யுறு புணர்ச்சி கொண்டும் பழகுகின்றனர். காதலியைக் கூடிப் பெற்ற இன்பத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான் அவன். அவளது தோள், நிறம்தளிர், பல் அழகு, உடம்பின்மணம் இவற்றின் நலம் புனைந்துரைத்துக் கொண்டிருக்கிறான்.


இங்கு அவளது கண் அழகு பற்றி புனைகிறான். காதலியை காணச் செல்லும் வழியில் அவன் குளத்தில் பூத்திருக்கும் குவளை மலர்களைக் காண்கிறான். அப்போது, இயல்பாக அவளது கண்கள் நினைவுக்கு வந்து அம்மலர்களுடன் அவளது கண்களை ஒப்பிட்டு நோக்க மனம் தூண்டுகிறது.

 காதலியின் கண்களின் அழகு குவளை மலரில் இல்லை என்று அவனாக  உணர்கிறான். மலர் நேரே வான் நோக்கிப் பூத்திருக்கும் இயல்புடையது. அந்த மலர் அப்படி நிமிர்ந்திருப்பது அது இன்னும் தன்  காதலியைப் பார்க்காததனால்தான் என்று எண்ணுகிறான். 'தலைநிமிர்ந்து காட்சி அளிக்கும் அம்மலர்கள், என் காதலியின் கண்களைக் காணும் ஆற்றலைப் பெற்றிருந்தால், அவற்றுக்கு யாம் ஒப்பமாட்டோம் என்று வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலம் நோக்கும்' என்று சொல்கிறான். அதாவது அவளது கண் குவளை மலரையே வெட்கப்படச் செய்வது என்கிறான். தலை குனிதலும், நிலம் நோக்கலும் நாணத்தினால் என அவனாகவே  புனைந்து  சொல்கிறான்.

இங்கேதான் எனக்கொரு சின்ன சந்தேகம்.

1 .தலைவியின் கண்ணைப் பார்த்து வெட்கமடைந்த ,நீரில் வாழும்  குவளை மலர் தலை குனிந்தால்  அது நீரைத்தானே பார்க்கும் (அ) பார்க்க முடியும் , அல்லது நீரில் தன் பிம்பத்தைதானே பார்க்கும் ?

இவ்வாறு இருக்க ,அக்குவளை மலர் "  நிலன் நோக்கும் " என்று ஏன் வள்ளுவர் கூறினார் ?

எனது பார்வையில் இதன் பொருள்.

நிலத்தில் உள்ள ஜீவன்கள் மற்றவர் முன் நாணப்பட்டாலோ, அசிங்கப்பட்டாலோ நீரிலே பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும்.  ஆனால் நீரில் வாழும் குவளை மலர் அத் தலைவியின் அழகிய கண்களைக் கண்டால் நாணி தலை குனிந்தவாறே  அசிங்கப்பட்டு   கரையில் இருக்கிற நிலப்பகுதியை பார்த்து நான் விரைவில் அந்த தரைப்பகுதியில் விழுந்து எப்போது சருகாகிப் போவேன் என்றதாம்.

நன்றி  . சுரேஷ் மணியன்.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.