பள்ளிக்கூடம்
எங்க ஊரு சுத்தமல்லியில் நான் 1989 களில் பள்ளியில் படிக்கும்போது, தொடக்கப்பள்ளிக்கும், உயர்நிலைப்பள்ளிக்கும் நாங்கள் வைத்திருந்த பெயர் சின்னப்பள்ளிக்கொடம், பெரியபள்ளிக்கொடம் என்பதாகும்.
ஊருக்கு கிழக்குப்பகுதியில் சிவன் கோவிலுக்கு அருகில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியான சின்ன பள்ளிக்கூடம்.
ஊருக்கு மத்தியில் காளியம்மன் கோவில் அருகில் இருப்பது அரசு உயர்நிலைப்பள்ளி எனும் பெரிய பள்ளிக்கூடம், ஆனால் இந்த இரண்டு பள்ளிக்கும் உள்ள பொருத்தம் என்னவென்றால் பள்ளிக்கு அருகில் கண்டிப்பாக சிறிய குளம் ஒன்று உண்டு.
சின்னப்பள்ளிக்கூடம் என்றாலே இன்றும் எங்களுக்கு நினைவுக்கு வரும் ஆசிரியர்கள்
ஒன்றாம் வகுப்பு அ பிரிவு பிள்ளையார் கோவில் தங்கராசு வாத்தியார், ஆ பிரிவு மீசை வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு) இரண்டாம் வகுப்பு குண்டு டீச்சர் ( தங்கராசு வாத்தியாரின் மனைவி சரசுவதிக்கு நாங்கள் வைத்த பெயர்)
மூன்றாம் வகுப்பு சின்னசாமி வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)
பிறகு மீசை மாரிமுத்து வாத்தியார்,
பெரிய வாத்தியார் (H M) சாமிநாதன் .
மேலே சொன்ன வாத்தியார்கள் எல்லோரும் சின்னபள்ளிக்கூட மாணவர்கள் வாக்களிப்பதாக இருக்கும் தேர்தலில் நின்றிருந்தால் மாணவர்களின் அத்தனை ஓட்டுகளையும் சிந்தாமல் சிதறாமல் சமமாக பெற்றிருக்கூடியவர்கள் தங்கராசு வாத்தியாரும் அவர் மனைவி குண்டு டீச்சரும்தான். அந்த அளவுக்கு பசங்க மேல் பாசமாக இருப்பார்கள், அவர்கள் கைகளில் ஒரு நாளும் மாணவர்களை அடிக்கின்ற மூங்கில் குச்சிகளை பார்க்க முடியாது . இதற்கு நேர்மாறானவர்கள் மீசை சாமிநாதன் வாத்தியாரும், மீசை மாரிமுத்து வாத்தியாரும் ஆவார்கள் ,ஏன் என்றால் வீணை இல்லாத கலைமகளை கூட பார்த்துவிடலாம், ஆனால் இவர்கள் கையில் மூங்கில் குச்சி இல்லாமல் இவர்களை பார்க்க முடியாது, அதிலும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் இருந்தே பத்து பதினைந்து அடி தூரத்தில் உட்கார்ந்திருக்கும் பயலுகளையும் அடிக்கிற மாதிரி நீண்ட மூங்கில் குச்சி வைத்திருப்பார்கள், அந்த குச்சியை அழகாக வெட்டி, கணுக்களை நீக்கிவிட்டு அந்த குச்சியை ராஜமரியாதையோடு வாத்தியாருக்காக தூக்கிவரும் கருங்காலி பயலும் அதே வகுப்பில்தான் இருப்பான்,. அவனுக்கும் மற்ற பயலுகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், வாத்தியாரின் அடி அவனுக்கு கொஞ்சம் லேசா விழும், அதுதான் அவனுக்கான அதிகபட்ச சலுகை.
அதே போன்று ஒவ்வொரு வகுப்பிலும் நன்கு திடகாத்திரமான, உயர்ந்து காணப்படும் நான்கு பயலுகளுக்கு என கிளாஸ் வாத்தியார் சில பணிகளை வழங்குவார். எந்த பயல் பள்ளிக்கூடம் வராமல் வீட்டில் அடம்பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றானோ, அவனை அந்த நான்கு பயலுகள் அவனை தூக்கிக் கொண்டு வரவேண்டும்.
தூக்கிக் கொண்டு வரும் அவர்கள் பள்ளிக்கு வராது அடம்பிடிப்பவனின் அத்தனை வசவு சொற்களையும் ( தேவிடியா மொவுனுவோளா ! குச்சிகௌகாரி மொவுனே, என்ன வுடுடா, பள்ளிக்கொடம் எனக்கு வேணாண்டா அய்யோ! விடுடா )
பொறுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் .
சின்ன பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ள அந்தக் குளம்தான் எங்களுக்கு சிறுநீர்க்கழிப்பறையாக எங்களால் மாற்றியமைக்கப்பட்டது, மேலும் வாத்தியார்களின் பிரம்படிக்கு பயந்தோடும் என்னைப் போன்ற பயலுகளுக்கு, பக்கத்தில் உள்ள சிவன்கோவில்தான் அடைக்கலம் தந்து நாள் முழுவதும் எங்களை காப்பாற்றும். இதுபோக சில வாண்டுகளின் குறும்பாட்டங்கள் அதிகம் அரங்கேறும் நேரம் பொதுவாக,
*காலை பள்ளித் தொடங்கும் முன்பு
*காலை இன்ரோல் பெல்லு ( இன்டர்வெல் பெல்)
*சாப்பாட்டுப் பெல்லு ( மதிய உணவு இடைவேளை )
காலை பள்ளித் தொடங்கும் போது அவனவனும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள், பள்ளிக்கூட வாசலை நெருங்கியவுடன் சிலருக்கு வயிற்றுவலி, மயக்கம், வாந்தி உமட்டல் இன்னபிற நடிப்புகள் மூலம் அசத்தி வகுப்புவாத்தியார் அனுமதியோடு வீட்டுக்கு போய்விடுவார்கள். மற்றோர் பக்கம் எங்களை விட மூத்த கிளாஸ் மாணவர்கள் சிலர் பக்கத்தில் உள்ள சிவன் கோவிலின் உச்சியில் அடைக்கலமாகி விடுவர், இன்னும் சில வாண்டுகள் சிவன் கோவிலின் முன்னுள்ள நந்தியின் மீதேறி நேரத்தை பங்கிட்டு கொண்டு சவாரி செய்வார்கள், அதிலும் சில விஷமிகள் நந்தியின் காதருகே குனிந்து " எங்க வாத்தியாருக்கு ஜொரம் வந்துடனும் " என்று நந்தியிடம் சிபாரிசு வைப்பர்.
காலை இண்டர்வெல் நேரத்தில் குளத்தின் கரையருகில் உள்ள ஏதாவதொரு சீமை கருவேல மரக் கன்றை தேர்ந்தெடுத்து, அதற்கு நீர் பாய்ச்சுவது போல குச்சியால் நிலத்தை கீறி வாய்க்கால் அமைத்து அந்த வாய்க்காலில் சிறுநீரை பீய்ச்சியடிப்பதும் ஓர் அலாதியான அனுபவமே, ஆனால் அப்போது இரண்டு பேர் சிறுநீர் கழிக்கும்போது, மற்றவனுடைய சிறுநீர் அடுத்தவனுடையதோடு கலந்துவிட்டால், திடிரென ஒருவன் தன் கண் இமை மயிற்றை பிடுங்கி அந்த இடத்தில் போடுவான். இது என்ன விதமான சாஸ்திரம் என்று இது நாள் வரை தெரிந்ததில்லை.
இதுதான் போன்றவைதான் பள்ளிகால நினைவுகள். .
##டொய்ன் டொய்ன் டொய்ன்
பள்ளிக்கூடம் விட்டாச்சிடோய் .
சுரேஷ் மணியன் M A .
என்றும் மனதில் நிற்கும் அருமையான நினைவுகள்.
ReplyDelete