வில்லேரருழவனும், சோல்லேருழவனும்.
சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன், அவன் பகைவனான மலையமானின் புதல்வர்களை யானைக்காலின் கீழ் கிடத்தி கொல்ல முயல்கிறான். தெருமன்றத்தில் வேடிக்கை காண மக்களும் காத்து நிற்கின்றனர். மன்னனும் நிற்கிறான். யானையை விட்டு மிதிப்பதற்காக மலையமானின் குழந்தைகள் தரையிலே கிடத்தப்பட்டிருக்கின்றனர், எதிரே குன்றசைந்தாற் போன்று பட்டத்து யானையை பாகன் அழைத்து வருகிறான், மயான அமைதி அவ்விடத்தில் தம்மை மிதித்து கொல்ல வருவதையும் அறியா அம் மழலைகள் யானையை பார்த்து கை கொட்டி சிரிக்கின்றனர் . நெஞ்சை சுடும் இக்காட்சியை பார்த்த கோவூர்க் கிழார் எனும் பழந் தமிழ் புலவன் மன்னனை நோக்கி தன் கவி வாளை சுழற்றுகிறான்.
பாடல்
" நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே,புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறா அர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கணநோ வுடையர்,
கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே !
பொருள் -
( மன்னனே நீ புறாவின் துயரத்தை மட்டுமல்ல, மற்ற உயிர்களின் துன்பத்தையும் போக்கும் சோழர் குடியில் பிறந்தவன்.
இச்சிறுவர்களோ, கற்றவர் பாடும் வறுமையை காணவே அஞ்சி மற்றவருக்கு பகுத்து கொடுத்து வாழும் பண்பான குடியில் பிறந்தவர்கள். தங்களை கொல்ல வந்து நிற்கும் யானையைக் கண்டும் கூட அஞ்சாமல் கை கொட்டி நிற்கும் இச் சின்னஞ் சிறுகுழந்தைகள் ! இப்பெரிய கூட்டதை பார்த்து பயந்து நிற்கின்றனர் ( இத்தகைய பிள்ளைகளை நீ கொல்ல நினைக்கலாமா ? ) நான் கூற வேண்டியதை கூறிவிட்டேன் ! இனி உன் விருப்பப் ப செய்துகொள் )
மன்னனும் தன் தவறுணர்ந்து குழந்தைகளை விடுவித்தான் .
அரசனாயினும் அதற்காய் பயம்கொள்ளாது அறிவுரை வழங்கிய புலவனே நீ வாழி! வாழி!
Comments
Post a Comment