Skip to main content

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன்

கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும்.

கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன்.

கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது,
"  பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!

சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்
போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!

அண்ணனொடு தம்பியர்கள்
நாலாகி ஐந்தாகி
ஆறேழு ஆனவிதம் கூறி - எனை
ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  "
என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று.

அயோத்தியை விட்டு சீதையும் இராமனும் வனத்தில் இருந்தபோது, அத்தகைய துயரான அந்தச்சூழலின்போதும் கூட இராமனுக்கும் சீதைக்கும் இடையே கண்களால் ஒருவருக்கொருவார் நகைச்சுவை மொழியால் வெட்கப்படுகின்றனராம்.  அதாவது சோலையின் அருகே உள்ள நீர்நிலையில் உள்ள  அன்னத்தின் நடையைக் கண்டு இராமன் சீதையைப் பார்த்து குறிப்பாய் புன்னகைக்கிறாராம், ( ஏய் அன்னமே மெல்லிடை கொண்ட  என் ஏந்திழை சீதையின்  நடையைப் பார்த்துதானே வெட்கப்பட்டு இவளுடைய நடைக்கு தாம் ஒப்பாகமாட்டோம் என்றுதானே கரையோரம் ஒதுங்கிச் செல்கிறாய்  )

சீதைக்கு மிகவும் கூச்சம் கலந்த பெருமிதமான வெட்கம் வந்ததாம். உடனே அந்த சீதை அங்கே அவர்களைக் கடந்து சென்ற யானைக்கன்றைக் கண்டு சீதை ராமனைப் பார்த்து புன்  முறுவல் பூத்தாளாம்.( அடடா இந்த ராமனின் தோள் வலிமைக்கு தாம் ஒப்பாக மாட்டோம் என்று அந்த யானைகள் அவ்விடத்தை விட்டு அகன்றதாம். )
பாடலை பாருங்கள்.
 "ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டுவந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்புதியது ஓர் முறுவல் பூத்தாள்"

கம்பனை நினைத்து பார்க்கிறேன்

திகைத்து போகிறேன் .

அன்போடும் இலக்கியத்தோடும் : சுரேஷ்மணியன்.MA,

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட