Skip to main content

மீண்டும் பள்ளிக்கு போகலாம் !

எங்க ஊரு சுத்தமல்லியில் நான்  1989 களில் பள்ளிகளில் படிக்கும்போது, தொடக்கப்பள்ளிக்கும், உயர்நிலைப்பள்ளிக்கும் நாங்கள் வைத்திருந்த பெயர்  சின்னப்பள்ளிக்கொடம், பெரியபள்ளிக்கொடம் என்பதாகும்.
   ஊருக்கு கிழக்குப்பகுதியில் சிவன் கோவிலுக்கு அருகில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியான  சின்ன பள்ளிக்கூடம்.
ஊருக்கு மத்தியில் காளியம்மன் கோவில் அருகில் இருப்பது அரசு உயர்நிலைப்பள்ளி எனும் பெரிய பள்ளிக்கூடம், ஆனால் இந்த இரண்டு பள்ளிக்கும் உள்ள பொருத்தம் என்னவென்றால் பள்ளிக்கு அருகில் கண்டிப்பாக சிறிய குளம் ஒன்று உண்டு.

சின்னப்பள்ளிக்கூடம் என்றாலே இன்றும் எங்களுக்கு நினைவுக்கு வரும் ஆசிரியர்கள்
ஒன்றாம் வகுப்பு  அ பிரிவு பிள்ளையார் கோவில் தங்கராசு வாத்தியார்,  ஆ பிரிவு மீசை வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)  இரண்டாம் வகுப்பு குண்டு டீச்சர் ( தங்கராசு வாத்தியாரின் மனைவி சரசுவதிக்கு நாங்கள் வைத்த பெயர்)
மூன்றாம் வகுப்பு சின்னசாமி வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)
பிறகு மீசை மாரிமுத்து வாத்தியார்,
பெரிய வாத்தியார் (H M)  சாமிநாதன் .
மேலே சொன்ன வாத்தியார்கள் எல்லோரும் சின்னபள்ளிக்கூட மாணவர்கள் வாக்களிப்பதாக இருக்கும்  தேர்தலில் நின்றிருந்தால் மாணவர்களின் அத்தனை ஓட்டுகளையும் சிந்தாமல் சிதறாமல் சமமாக பெற்றிருக்கூடியவர்கள் தங்கராசு வாத்தியாரும் அவர் மனைவி குண்டு டீச்சரும்தான். அந்த அளவுக்கு பசங்க மேல் பாசமாக இருப்பார்கள், அவர்கள் கைகளில் ஒரு நாளும் மாணவர்களை அடிக்கின்ற மூங்கில் குச்சிகளை  பார்க்க முடியாது . இதற்கு நேர்மாறானவர்கள் மீசை சாமிநாதன் வாத்தியாரும்,  மீசை மாரிமுத்து வாத்தியாரும் ஆவார்கள் ,ஏன் என்றால் வீணை இல்லாத கலைமகளை கூட பார்த்துவிடலாம், ஆனால்  இவர்கள் கையில் மூங்கில் குச்சி  இல்லாமல் இவர்களை பார்க்க முடியாது, அதிலும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில்  இருந்தே பத்து பதினைந்து அடி தூரத்தில் உட்கார்ந்திருக்கும் பயலுகளையும் அடிக்கிற மாதிரி நீண்ட மூங்கில் குச்சி வைத்திருப்பார்கள், அந்த குச்சியை அழகாக வெட்டி, கணுக்களை நீக்கிவிட்டு அந்த குச்சியை  ராஜமரியாதையோடு வாத்தியாருக்காக  தூக்கிவரும் கருங்காலி பயலும் அதே வகுப்பில்தான் இருப்பான்,. அவனுக்கும் மற்ற பயலுகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், வாத்தியாரின் அடி  அவனுக்கு கொஞ்சம் லேசா விழும், அதுதான் அவனுக்கான அதிகபட்ச சலுகை.
அதே போன்று ஒவ்வொரு வகுப்பிலும் நன்கு திடகாத்திரமான, உயர்ந்து காணப்படும் நான்கு  பயலுகளுக்கு என  கிளாஸ் வாத்தியார் சில பணிகளை வழங்குவார்.  எந்த பயல் பள்ளிக்கூடம் வராமல் வீட்டில் அடம்பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றானோ,  அவனை அந்த நான்கு பயலுகள் அவனை தூக்கிக் கொண்டு வரவேண்டும்.
 தூக்கிக் கொண்டு வரும் அவர்கள் பள்ளிக்கு வராது அடம்பிடிப்பவனின் அத்தனை வசவு சொற்களையும் ( தேவிடியா மொவுனுவோளா !  குச்சிகௌகாரி மொவுனே, என்ன வுடுடா, பள்ளிக்கொடம் எனக்கு  வேணாண்டா அய்யோ!  விடுடா )
பொறுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் .

         சின்ன பள்ளிக்கூடம் பக்கத்தில் உள்ள அந்தக் குளம்தான் எங்களுக்கு சிறுநீர்க்கழிப்பறையாக எங்களால் மாற்றியமைக்கப்பட்டது, மேலும் வாத்தியார்களின் பிரம்படிக்கு பயந்தோடும் என்னைப் போன்ற பயலுகளுக்கு,  பக்கத்தில் உள்ள சிவன்கோவில்தான் அடைக்கலம் தந்து நாள் முழுவதும் எங்களை காப்பாற்றும். இதுபோக சில வாண்டுகளின் குறும்பாட்டங்கள் அதிகம்  அரங்கேறும் நேரம் பொதுவாக,
 *காலை பள்ளித் தொடங்கும் முன்பு
*காலை இன்ரோல் பெல்லு ( இன்டர்வெல் பெல்)
*சாப்பாட்டுப் பெல்லு ( மதிய உணவு இடைவேளை )

காலை பள்ளித் தொடங்கும் போது அவனவனும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்ட ஆரம்பிப்பார்கள், பள்ளிக்கூட வாசலை நெருங்கியவுடன் சிலருக்கு வயிற்றுவலி, மயக்கம், வாந்தி உமட்டல் இன்னபிற நடிப்புகள் மூலம் அசத்தி வகுப்புவாத்தியார் அனுமதியோடு வீட்டுக்கு போய்விடுவார்கள்.  மற்றோர் பக்கம் எங்களை விட மூத்த கிளாஸ் மாணவர்கள் சிலர் பக்கத்தில் உள்ள சிவன் கோவிலின் உச்சியில் அடைக்கலமாகி விடுவர், இன்னும் சில வாண்டுகள் சிவன் கோவிலின் முன்னுள்ள நந்தியின் மீதேறி நேரத்தை பங்கிட்டு கொண்டு சவாரி செய்வார்கள், அதிலும் சில விஷமிகள் நந்தியின் காதருகே குனிந்து " எங்க வாத்தியாருக்கு ஜொரம் வந்துடனும் " என்று நந்தியிடம் சிபாரிசு வைப்பர்.
காலை இண்டர்வெல் நேரத்தில் குளத்தின் கரையருகில் உள்ள ஏதாவதொரு சீமை கருவேல மரக் கன்றை தேர்ந்தெடுத்து, அதற்கு நீர் பாய்ச்சுவது போல குச்சியால் நிலத்தை கீறி வாய்க்கால் அமைத்து அந்த வாய்க்காலில் சிறுநீரை பீய்ச்சியடிப்பதும் ஓர் அலாதியான அனுபவமே, ஆனால்  அப்போது இரண்டு பேர்  சிறுநீர் கழிக்கும்போது, மற்றவனுடைய  சிறுநீர் அடுத்தவனுடையதோடு கலந்துவிட்டால், திடிரென ஒருவன் தன் கண் இமை மயிற்றை பிடுங்கி அந்த இடத்தில் போடுவான்.  இது என்ன விதமான சாஸ்திரம் என்று இது நாள் வரை தெரிந்ததில்லை.

இது போன்ற பள்ளிகால நினைவுகளை,  இன்று செயல் தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தா.பழூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் அண்ணன் திரு. சிவசங்கர் எஸ்.எஸ்
 அவர்கள் தலைமையில் சித்தப்பா
வா.சௌந்தரராஜன் திமுக ஆகியோரோடு ஆறுக்கும் மேற்பட்ட ஊர்களின் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு இன்று அவர்களுடன் பயணித்த போது கடந்த கால நினைவு பக்கங்கள் என்னுள் எழுந்தன, சென்றிருந்த அனைத்து பள்ளி மாணவர்களிடமும் எழுதுபொருட்கள் வழங்கும் போதும், அம்மாணவர்களின் உருவத்துக்கேற்ப குனிந்து கனிவுடன் அப்பிள்ளைகளை நோக்கி  அண்ணன் சிவசங்கர்
அவர்கள் இன்று எதற்காக நோட்டு, பேனா தருகிறோம் தெரியுமா ?  என்பர் அப்பிள்ளைகள் பதில் சொல்லாது கூச்சப்படும் போது
   " திமுக வின் செயல் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மாண்புமிகு. மு.க .ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை உங்களோடு கொண்டாடுகிறோம்" என்று கூறினார்.
அதை நான் அருகே இருந்து கண்ட போது என் மனதில்
" நாம் படித்த போது ஒரு வார்டு கவுன்சிலர் கூட, மெம்பர் கூட எங்களோடு இப்படி பேசியதில்லை, ஆனால் இன்று ஒரு மாவட்டத்தின் செயலாளர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், மூன்றாம் முறை எதிரிகளின்  சதியால் வெற்றி வாய்ப்பை இழந்தவர், எழுத்தாளர், அரசியல் நோக்கர் இப்படியான தன்னேரில்லா தலைவர் ஒருவரோடு உரையாடும் வாய்ப்பை பெறும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்" .

##டொய்ன் டொய்ன் டொய்ன் .
பள்ளிக்கூடம் விட்டாச்சிடோய் .

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட