Skip to main content

 மீள்பதிவு .


தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !  அந்த வரிகள் .


" தண்டவாளத்தில் 

நீ 

தலை வைத்து படுத்ததால்தான் 

தலைவா !

இன்று தமிழ் 

நிமிர்ந்து நிற்கிறது.  


மேலும்,  

அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் 


" இவன் 

வெள்ளை யானைகளோடு 

போராடிய போது 

வீழ்ந்ததில்லை 

கறுப்பு யானையோடு 

கைகுலுக்கிய போதுதான் 

காணாமல் போனான்.


இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின 


ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  பிறகு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே அரண்டு போய் தமிழ்த்துறையின் படிக்கட்டில் விழுந்தேன்,  விழுந்த என்னை அரவணைப்போடு அள்ளிக்கொண்டனர் அத்துறை  பேராசிரியர்கள்.

முதலாமாண்டு பயின்ற போது " இலக்கிய விமர்சனங்கள் " எனும் நூல் பாடமாக இருந்தது அதன் மூலம் கம்பனின் காவியத்தின் மீது தனியாத தாகம் ஏற்பட்டது,  அத்தாகத்தை தத்தனூர் கிளை நூலகத்தில் உள்ள கம்பன் ஆய்வு நூல்கள் தீர்த்தன என்றால் மிகையாகாது.  இன்று வரை ஒவ்வொரு நாளும் கம்பனின் கவித்திறம் மாபெரும் பிரமிப்பை என்னுள் ஏற்படுத்தி கொண்டே வருகிறது .


கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கம்பனின் கவித்திறத்திற்கும் உவமை நயத்திற்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொற்களை எடுத்தாளும் திறத்திற்கும் பல்வேறு பாடல்களை உதாரணம் காட்டலாம்.


இதோ, பால காண்டம். எழுச்சிப் படலம்.


சிவதனுசை  முறித்து இராமன் வெற்றி கொண்டான் என்ற செய்தி தசரதருக்கு வந்து சேருகிறது. உடனே தனது படை பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்பட ஆயத்தமாகிறார் அவர். அவர் தம் சேனைகள் ஊழிக்காலத்தில் ஓங்கிப் பொங்கும் கடல் போல ஒன்று சேர்ந்து புறப்பட ஆரம்பித்தன. தன் படைக்குழுவினரின் இறுதியாகத் தான் செல்லலாம் என தசரதர் வெகு நேரமாகக் காத்திருக்கிறார். காத்திருப்பவர், வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.


படையின் முதல் வரிசை மிதிலையைச் சென்றடைந்து விட்டது. ஆனால் இறுதி வரிசை இன்னமும் அயோத்தியைத் தாண்டவில்லை. அந்த அளவிற்கு வரிசை நீண்டிருந்தது என்று வர்ணிக்கிறார் கம்பர். அதுவும் எங்கெங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாம். மேலே இருந்து உழுந்து (உளுந்து) போட்டால் கூடக் கீழே விழாதாம்.


அதனை அவர் மிக அழகாக,


” உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான் எழுந்திலன் எழுந்து இடைப் படரும் சேனையின் கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே”


என்று விளக்குகிறார் பாடலில்.


எள் போட்டால் எள் விழ இடமில்லை என்பது தான் வழக்கில் இருக்கும் சொல். ஆனால் கம்பர் அதனைப் பயன்படுத்தாமல் அதற்கு மாறாக உழுந்து போட்டால் விழ இடமில்லை என்று கூறியிருக்கிறார். ஏன் தெரியுமா?


அவர்கள் அனைவரும் செல்வது இராமனின் மணவிழாவைக் காணவும், அதன் வெற்றியைக் கொண்டாடவும் தான். அது ஒரு மங்கல நிகழ்ச்சி. ஆனால் எள் என்பது அமங்கல நிகழ்ச்சிகளில், குறிப்பாக நீத்தார் கடனுக்கான சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியது. அதனை ஒரு மங்கலகரமான நிகழ்வுக்காகச் செல்லும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மிக நுணுக்கமாக கம்பர் “எள் விழவும் இடம் இல்லை” என்று சொல்லாமல் “உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்” என்று மிக அழகாகப் பயன்படுத்தி உள்ளார்.


அதே சமயம் யுத்த காண்டத்தில் இராமனின் அம்புகளால் துளைக்கப்பட்டு இராவணன் வீழ்ந்து கிடக்க, அவனை அணுகிப் புலம்பும்அவன் மனையாள்  மண்டோதரியின் கூற்றாக,


“வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவான் வாளி”


என்று கூறுமிடத்தில் “எள்ளிருக்கும் இடமின்றி” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி, அதன் அமங்கல நிகழ்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் இராவணனைத் துளைத்த இராம பாணமானது, சீதையின் நினைவு மேலும் எங்காவது உள்ளே இருக்குமோ என்று உடல் முழுவதும் துளைத்ததாகக் குறிப்பிட்டுள்ள நயம் வியந்து போற்றத்தக்கது.


கம்பனின் இந்தச் சொல்லாற்றல் என்றும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதல்லவா? 


அதனால்தான் கவியரசு கண்ணதாசன் கம்பனை பற்றி பாடுவார் 


  " பத்தாயிரம் கவிதை

முத்தாக அள்ளிவைத்த

சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்

வித்தாக வில்லையென்று பாடு!


சீதை நடையழகும்

ஸ்ரீராமன் தோளழகும்

போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்

போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!


அண்ணனொடு தம்பியர்கள்

நாலாகி ஐந்தாகி

ஆறேழு ஆனவிதம் கூறி - எனை

ஆளுகிறான் மூளைதனில் ஏறி!


தென்னிலங்கைச் சோலையிலே

சீதை அனுமனிடம்

சொன்னதொரு வாசகத்தைப் பார்த்து - நான்

துள்ளிவிட்டேன் மெனியெல்லாம் வேர்த்து!


கள்ளிருக்கும் கூந்தலினாள்

உள்ளிருப்பாள் என்று சொல்லி

பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது

பாட்டல்ல உண்மையென்று நம்பு!


காலமெனும் ஆழியிலும்

காற்றுமழை ஊழியிலும்

சாகாது கம்பனவன் பாட்டு - அது 

தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!


கம்பனெனும் மாநதியில்

கால்நதிபோல் ஆவதென

நம்புகிறேன் பாட்டெழுதும் நானே - அந்த

நாயகன்தான் என்ன நினைப்பானோ? 


அன்பர்களே !  இலக்கிய நண்பர்களே ! தமிழுக்கு  " கதி "

கம்பனும்,  திருவள்ளுவரும்தான்  

எனவே கவிச்சக்கரவர்த்தி 

கம்பனைப் போற்றுதூம் கம்பனைப் போற்றுதூம்

கவி ஆற்றலில் ஈடின்மையால்…


அன்புடன்  : சு. கரிசல்நாடன். 


Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...